மானோ மீட்டர்.. கோள்களின் இயக்கம்.. நீர்மூழ்கிக் கப்பல்.. மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சிக்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார். அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பெரியசாமி, தேவகோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் பெர்னோலி தியரம், பகல் - இரவு மாதிரி, தனி ஊசல், மானோ மீட்டர், முழு அக எதிரொலிப்பு, கோணங்களின் பிம்பம், ஒத்த அதிர்வுகள், வளைவு பாதை மற்றும் நேர்கோட்டு பாதை, மணி மற்றும் கயிறு மாதிரி, கோள்களின் இயக்கம், ஆடிகளின் வகை, பல் மாதிரி, சிறுநீரகம், நீர் மூழ்கி கப்பல் உட்பட எழுபதுக்கும் மேற்பட்ட அறிவியல் தொடர்பான உபகரணங்கள் செயல்பாட்டுடன் செய்து காண்பிக்கப்பட்டது.
கண்ணங்குடி, தேவகோட்டை ஒன்றிய பள்ளிகளில் உள்ள மாணவர்கள், தேவகோட்டை பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல் நிலை பள்ளி மாணவிகள், ஆறாவது வார்டு நகராட்சி உயர் நிலை பள்ளி மாணவர்கள் உட்பட 7௦௦ க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பல பள்ளிகளின் ஆசிரியர்கள் பார்வையிட்டு சென்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளத்தூர் அ.மு.மு.அறக்கட்டளையும், அகஸ்தியா பவுண்டேசனும் இணைந்து செய்து இருந்தனர். அகஸ்தியா பவுண்டேசன் ஆசிரியர்கள் மகேஷ், கவியரசு, முத்து செல்வன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள்.
பள்ளிகள் திறப்பு
முன்னதாக முதல் பருவ விடுமுறைக்கு பின்பு இரண்டாம் பருவத்தின் முதல் நாளான பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள்,சீருடைகள் வழங்கப்பட்டன.
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி திறந்த உடன் மாணவ, மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள், சீருடைகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு வந்தவர்களை மாணவர் ஜெகதீசன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ராஜ ராஜேஸ்வரி மாணவ, மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கினார். நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார்.