கட்டுக்கடங்காத கூட்டம்.. அதிமுகவினரை லேசான தடியடி நடத்திக் கலைத்த போலீஸ்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட போது கட்டுக்கடங்காத கூட்டத்தை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரது வீடான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, கட்டுக்கடங்காத வகையில் அதிமுக தொண்டர்கள் குவிந்ததால், அவர்களை லேசான தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று முன் தினம் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்த என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அப்போலோ மருத்துவமனையில் இருந்த அவரது உடல் அவர் வாழ்ந்த வீடான போயஸ் கார்டனுக்கு வாகனத்தில் உரிய மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, அப்போலோ வாசலில் இருந்து போயஸ் கார்டன் வரை சாலையின் இருமருங்கிலும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி தங்கள் தலைவியின் உடல் செல்லும் வாகனத்தை பார்த்து கொண்டிருந்தனர்.
Scuffle between Police and AIADMK supporters outside #jayalalithaa 's residence in Chennai pic.twitter.com/jcy8zwmsMe
— ANI (@ANI_news) December 5, 2016
ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்ததாலும், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர்கள் தங்கள் தலைவரின் முகத்தை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் முண்டியடித்துக் கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். கட்டுக்கடங்காமல் போன அதிமுக தொண்டர்களை லேசான தடியடி செய்து போலீசார் கலைத்தனர்.
இதனையடுத்து, போலீசார் அராஜகம் ஒழிக என்று அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள். பின்னர், மீண்டும் அங்கு அமைதி திரும்பியது.