தமிழகம், புதுவையில் 37 தொகுதிகளில் திமுக அணிக்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க அக்கட்சியின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 40 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது. தமிழகத்தில் வட சென்னை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த மூன்று தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தமிழக வாக்காளர்களை கட்சியின் நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.
எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 37 தொகுதிகளிலும் மதவாத பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக மதசார்ப்பற்ற வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்று நிர்வாகக் குழு முடிவு செய்கிறது.
மதவாதம் இன்று நாடு சந்திக்கும் பேரபாயம் ஆகும். மதவாதத்தின் அடையாளமாக திகழும் நரேந்திரமோடி தலைமையிலான மதவாத கூட்டணி படுதோல்வியடைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
ஆகையால் மதவாதத்திற்கு எதிராக வலுவான அணியாக களம் காணும் தி.மு.க கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தான் போட்டியிடாத தொகுதிகளில் ஆதரவளிக்கிறது.
இவ்வாறு எஸ்.டி.பி.ஐ நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications