மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
சென்னை: மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், கடல் வளத்தை பாதுகாக்கவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த தடைக் காலங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாது. அதற்காக தமிழக அரசு தடைக்கால நிவாரண நிதியாக ரூ 2 ஆயிரம் வழங்கி வருகிறது. பெருகி வரும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் போன்ற காரணங்களால் இந்த தடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை.
மேலும் மீன்பிடி வலைகள், படகுகளின் பராமரிப்புச் செலவும் அதிகமாகிறது. ஆகவே தமிழக அரசு இத்தொகையினை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசும் தடைக்கால நிவாரண தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க முன்வர வேண்டும்.
மேலும் இத்தடைக் காலங்களில் வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் வெளிமாநில கப்பல்கள் மூலம் தமிழக கடல் பகுதிகளில் மீன்களை அதிக அளவு பிடித்துச் செல்கின்றனர். இதனால் இனப்பெருக்கத்திற்காக அமல்படுத்தப்படும் தடைக்காலம் எந்த ஒரு பயனுமில்லாமல் போகின்றது. ஆகவே அதனையும் தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
மேலும் 30 சதவீதமான மீன்களின் இனப்பெருக்கத்திற்கு இந்த 45 நாள் காலம் போதாது என்பதால், தமிழக அரசு முன்கூட்டியே மீன் குஞ்சுகளை வளர்த்து கடலில் விடும் முயற்சியை மேற்க்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.