இலங்கை தமிழர்கள் இனப்படுகொலை - சட்டசபை தீர்மானத்திற்கு எஸ்டிபிஐ கட்சியும் வரவேற்பு
சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எஸ்டிபிஐ கட்சியும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கானோர் படுகாயமுற்றனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற குரல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் முன் வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் சுதந்திரமான சர்வதேச வல்லுநர் குழுவின் விசாரணை அறிவிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தனது நாட்டில் இந்த விசாரணைக்கு அனுமதி மறுத்துவிட்டது.
இந்த சூழலில் கடந்த 14-ஆம் தேதி முதல், ஜெனிவாவில் மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தை நிறைவேற்ற முன்னின்ற அமெரிக்கா, தற்போது இலங்கையில் உள்நாட்டு விசாரணை போதுமானது என்ற தீர்மானத்தை கொண்டுவர முனைப்பு காட்டி வருகிறது. அதிகம் பொறுப்பு வாய்ந்த நம் இந்திய அரசு, எப்போதும் போல மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் சர்வதேச விசாரணை தேவை என்றும், அதற்காக மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி, சிறப்பு வாய்ந்த தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருப்பது பாராட்டுக்குறியது.
ஏற்கனவே 2011 ம் ஆண்டு இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானமும், 2014 ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு தேவை என்ற தீர்மானமும் தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த தீர்மானம் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இது சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தர உதவும்.
இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழக அரசையும், தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையும், ஏகமனதாக இத்தீர்மானம் நிறைவேறுவதற்கு ஒத்துழைப்பு அளித்த, அனைத்து கட்சிகளை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களையும் பாராட்டுகிறேன். ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டும் காணாமல் பாராமுகமாக இருந்ததைப் போல் மத்திய அரசு இந்த தீர்மானத்தையும் விட்டுவிடாமல், தமிழக சட்டமன்றத்தின் கவுரவத்தை பாதுகாக்கும் வகையில் இத்தீர்மானத்தை நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications