உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் அப்பீல்!
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டப்பிறகே அடுத்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த 25ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 26ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதிவரை வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. நாளை வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
திமுக மனு
தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு ஆணையை அவசரகதியில் வெளியிட்டதை எதிர்த்தும், இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறியும் திமுக வழக்கு தொடர்ந்தது. தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார். புதிதாக அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் நீதிபதி கிருபாகரன் ஆணையிட்டார்.
வேட்பாளர்கள் கலக்கம்
உயர்நீதிமன்ற உத்தரவினால் எற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கலக்கமடைந்தனர். உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு ஆளுங்கட்சி தவிர பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனுவில் தேர்தல் அறிவித்த பின்னர் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
திமுக கேவியட் மனு
முன்னதாக திமுக தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்தது. திமுகவின் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டப்பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, திமுக தாக்கல் செய்துள்ள கேவியட் மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.