கள்ளக்காதலை விட மறுத்த கணவன் – இரண்டாவது மனைவியும் விஷம் குடித்து தற்கொலை
சேலம்: சேலத்தில் கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனால் இரண்டாவது மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த குறிச்சி ஊராட்சி, ரங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கல் அறுக்கும் தொழிலாளி பழனிசாமி. அவரது முதல் மனைவி பாவாயி. இரண்டாவது மனைவி சிவகாமி. பாவாயிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சிவகாமிக்கு, அய்யனார் என்ற மகனும், ஜானகி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2006ல் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முதல் மனைவி பாவாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பழனிசாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதை தெரிந்து கொண்ட அவரது இரண்டாவது மனைவி சிவகாமி கணவனை கண்டித்துள்ளார். இதனால், பழனிசாமிக்கும் சிவகாமிக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சிவகாமி கடந்த 9 ஆம் தேதி மாலை விஷம் குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் கிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவச் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து கள்ளக்காதலை கைவிடாமல் இரண்டாவது மனைவியை துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக பழனிச்சாமியை கைது செய்த வாழப்பாடி போலீஸார் அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.