வெங்கடேச பண்ணையார் நினைவு தினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு
தூத்துக்குடி: வெங்கடேச பண்ணையார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெருவாரியாக உள்ள நாடார் இனத்தை சேர்ந்தவர் வெங்கடேச பண்ணையார். ஜெயலலிதா ஆட்சியின்போது, கடந்த 2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி, போலீசார் சென்னையில் வெங்கடேச பண்ணையார் தங்கியிருந்த ஹோட்டலுக்குள், புகுந்து சுட்டுக் கொன்றனர்.
நாடார் இன மக்கள் பிற இன மக்களால் தாக்குதலுக்கு உள்ளானபோது அவர்களுக்கு ஆதரவாக ரவுடியிசத்தில் ஈடுபட்டவர் வெங்கடேச பண்ணையார். எனவே தென் மாவட்டங்களில் வெங்கடேச பண்ணையாருக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெங்கடேச பண்ணையாரின் சொந்த ஊரான அம்மன்புரத்தில், அவரின் நினைவு தினம் இன்று (26ம் தேதி) அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் 27ம் தேதியான நாளை காலை வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மா.ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.
தடையுத்தரவு இருப்பதால் மக்கள் கூட்டமாக செல்வதோ, கைகளில் ஆயுதங்களை எடுத்துச் செல்வதோ தடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications