சென்னையில் ஹோட்டல் காவலாளி அடித்துக்கொலை... வேன் டிரைவர் கைது
சென்னை: சென்னை கிண்டியில் ஹோட்டல் காவலாளியை அடித்துக் கொலை செய்ததாக வேன் டிரைவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் ஜவகர்லால் நேரு 100 அடி நெடுஞ்சாலையில் தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இதில் நேபாளத்தை சேர்ந்த சங்கர் (30) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இதே ஹோட்டலில் தஞ்சாவூரை சேர்ந்த அய்யப்பன் (28) என்பவரும் தங்கி இருந்து வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த ஹோட்டலுக்கு சொந்தமான சமையல் அறை ஒன்று உள்ளது. தேவையான உணவுகளை அங்கே சமையல் செய்து அதனை வேன் மூலம் ஹோட்டலுக்கு எடுத்து வருவது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை சமையல் கூடத்தில் தயாரான உணவுப் பொருட்களை அய்யப்பன் வேனில் ஏற்றிக் கொண்டு ஹோட்டலுக்கு வந்தார். ஹோட்டல் முன்பு வேனை நிறுத்திய அய்யப்பன், உணவுப் பொருட்களை இறக்கி வைக்க உதவிக்கு சங்கரை அழைத்துள்ளார்.
ஆனால், அதற்கு சங்கர் மறுக்கவே இருவருக்குமிடையே வாக்குவாதம் உண்டானது. பின்னர் அது மோதலாக உருவானது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் சங்கரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த சங்கரை, அய்யப்பன் கீழே பிடித்து தள்ளியுள்ளார்.
கீழே விழுந்ததால், சங்கரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கரை ஹோட்டல் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சங்கர் சேர்க்கப் பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போலீசார், வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் அய்யப்பனைக் கைது செய்தனர்.