தேமுதிக அலுவலகத்திற்குப் பாதுகாப்பு தொடர்கிறது!
சென்னை: சென்னையில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்கிறது.
தஞ்சையில் பஸ் நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவின் பேரில் அவரது கட்சியினர் அடித்து உடைத்து கிழித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் பரவியதும் அதிமுகவினர் திரண்டு வந்து தேமுதிகவினர் மீது பெரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸில் அதிமுக சார்பிலும், அரசு சார்பிலும் புகார் தரப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப் போடப்பட்டது. அதில் 13 தேமுதிகவினர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் விஜயகாந்த் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் வாங்கித் தப்பினார்.

மேலும் புதுச்சேரியில் விஜயகாந்த் தங்கியிருந்தபோது அங்கு அதிமுகவினர் முற்றுகைப் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள விஜயகாந்த்தின் வீடு, அவரது கட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு நேற்று போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். அந்தப் பாதுகாப்பு தற்போதும் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications