'பார்லிமென்ட்' பொட்டியுடன் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த ஓ.பி!
சென்னை: நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபைக்குள் வந்தபோது அவர் கை படு பவ்யமாக கவ்வியிருந்த அந்தப் பொட்டிதான் நமது கண்களை பெரிய லெவலுக்கு விரியச் செய்து வியப்படைய வைத்தது.
அந்த பட்ஜெட் பெட்டியில் உள்ளே என்ன இருந்தது என்பதை விட வெளியில் இருந்த மேட்டர்தான் மிக பிரதானமானது, பிரமாதமானது.
பார்லிமென்ட் பொட்டி
ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை அடங்கிய பெட்டியுடன் அவர் சட்டசபைக்குள் நுழைந்தார்.
செருப்பு கூட அணியாமல்..
முதல்வர் ஜெயலலிதா முன்னே செல்ல அவருக்குப் பின்னால் பெருமிதம் கலந்த புன்னகையுடன், அம்மா முகம் தாங்கிய அந்தப் பெட்டியைப் பத்திரமாக பிடித்தபடி நடந்து வந்தார் பன்னீர்செல்வம். அப்போது காலில் செருப்பு கூட அணியவில்லை ஓ.பி.
பார்லிமென்ட் பின்னணியில் அம்மா
அந்தப் பெட்டியில், முதல்வர் ஜெயலலிதாவின் படம் மிகப் பெரிதாக, பிரமாண்டமாக, அழகாக அச்சிடப்பட்டிருந்தது. பின்னணியில் நாடாளுமன்றக் கட்டடம். அப்படியெ ஜம்மென்று காட்சி தருகிறார் ஜெயலலிதா.
பளிச்சென தெரியும் வகையில்
பெட்டியின் கொண்டியை விட்டு விட்டு, இரு பக்கமும் தூக்கிப் பிடித்தபடி, அதாவது முதல்வர் ஜெயலலிதாவின் முகம் எல்லோருக்கும் பளிச்சென தெரியும் வகையில் தூக்கிக் காட்டியபடி, புன்னகை தவழ நடந்து வந்தார் ஓ.பன்னீர் செல்வம்.