விஜயகாந்த் ஓர் அரசியல் வியாபாரி… சொல்வது சீமான்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அரசியல் வியாபாரி என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவாகப் பிரச்சா ரம் செய்துவரும் சீமான், பிரசார மேடைகளில் காங்கிரஸ், திமுகவிற்கு எதிராக மட்டுமல்லாது பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைக்கிறார்.
விஜயகாந்த்திற்கு எதிரான கருத்துக்களை கூறும் சீமான் பாஜக கூட்டணியில் வைகோ இணைந்திருக்க கூடாது என்றும் கூறி வருகிறார்.

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ், பாஜக கட்சிகள் வெளியுறவுக் கொள்கையிலும் பொருளாதாரக் கொள்கையிலும் தவறான நிலைப்பாடு கொண்டவைதான். கச்சத் தீவை தூக்கிக் கொடுத்தது காங்கிரஸ். அதைப் பற்றி பேச மறுக்கிறது பாஜக. அதேபோல மீத்தேன் விவகாரத்திலும் காங்கிரஸ் செயல்பாட்டினை பாஜக எதிர்க்கவில்லை.

அதிமுகவிற்கு ஆதரவு ஏன்?
ஆனால் மேற்கண்ட எல்லாவற் றுக்கும் போராடி வருகிறது அதிமுக. ஈழத் தமிழருக்கு ஆதரவாக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற் றியதுடன் ஏழு பேர் விடுதலைக்கும் ஆதரவு அளிக்கிறது. எனவேதான் அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தோம்.

மோடி ஆதரவு விஜயகாந்த்
மோடி வந்தால் ஊழலை ஒழிப்பார் என்கிறார் விஜயகாந்த். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எத்தனை மாதங்கள் ஆயிற்று? அப்போதே விஜயகாந்த் இதைச் சொல்லியிருந்தால் அவர் யோக்கியர்.

அரசியல் வியாபாரி
என்னைப் பொறுத்தவரை அவர் ஓர் அரசியல் வியாபாரி; சந்தர்ப்பவாதி. எலும்புத் துண்டுக்காக ஓடுவதுபோல அங்கும் இங்கும் அலைபாய்ந்தவர், சீட்டும் நோட்டும் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜக அணியில் சேர்ந்துள்ளார். தனது மைத்துனரை அமைச்சராக்க மோடியை ஆதரிக்கிறார்.

வைகோவின் தவறு
வைகோ மாபெரும் வரலாற்றுத் தவறை செய்துவிட்டார். மதிமுக இப்போது போட்டியிடும் ஏழு தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டிருந்தால் நாங்கள் ஏன் அதிமுக-வுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறோம்.

திமுக எதையும் சாதிக்கவில்லை
மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து 16 ஆண்டுகள் அதிகாரம் செலுத்தியது திமுக. ஆனால், நாட்டில் பணம் இருந்தால் மட்டுமே கல்வி கிடைக்கும். ஏழைக்கு நோய் வந்தால் நேராகப் போய் சுடுகாட்டில் படுத்துக்கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகளில் திமுக சாதித்தது இதைத்தான். இனியும் திமுக-வுக்கு எதற்காக ஓட்டுப் போட வேண்டும்?

மாநில சுயாட்சி
பணக்காரர்கள் இந்தியா, நடுத்தர இந்தியா, ஏழைகள் இந்தியா என இங்கு மூன்று இந்தியாக்கள் இருக்கின்றன. இதில் எந்த இந்தியாவுக்கு பிரதமர் ஆக இவர்கள் ஆசைப்படுகிறார்கள்? ஒற்றை ஆட்சி இனியும் வேண்டாம். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி இதுவே எங்கள் கொள்கை.

2016ல் தனித்து போட்டி
அதிமுகவிற்கு நாங்கள் தரும் ஆதரவு லோக்சபா தேர்தலுக்கு மட்டும்தான் வரும் 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications