ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது நடவடிக்கை ஏன்?- சீமான் கண்டனம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் காவலர் மாயழகு மீதான நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தினர். இது காட்டுத்தீயாக பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியது. இறுதியில் போராட்டக்காரர்களுக்கு செவி சாய்த்து, ஜல்லிக்கட்டு நடத்த அரசு வழிவகை செய்தது.
இதில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த வந்த காவலர் மாயழகு என்பவர் திடீரென போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசினார். இதற்கு அப்போது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று சொன்ன காவல்துறை தற்போது அவருக்கு பதவி உயர்வை ரத்து செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரலாற்றில் தைப்புரட்சி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த தைப்புரட்சி எனும் வரலாற்றுப்பெரும் நிகழ்வில் 20-01-2017 அன்று சென்னை, மெரீனாவில் நடந்தப் போராட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் மாயழகு மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. காவலர் மாயழகு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் வாக்குறுதி அளித்த மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றைக்கு அவ்வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு 10 மாதங்களுக்குப் பிறகு துறைரீதியான நடவடிக்கை எடுத்திருப்பது ஒரு மோசடிச்செயலாகும். இதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது.
எது ஒழுங்கின்மை செயல்
கடந்த ஜூன் மாதம் மாயழகுவுக்கு மெமோ கொடுக்கப்பட்டபோது அது வழக்கமான நடைமுறைதான் என்று கூறிய உயர் அதிகாரிகள் கடந்த 13ஆம் தேதி 3-பி சார்ஜ் மற்றும் ஓராண்டுக்கு சம்பள உயர்வு ரத்து என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால், அவருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும்விதமாக இம்மண்ணின் மகனாய் தம்பி மாயழகு பேசியது ஒழுங்கின்மை என்றால், காவல் பணியில் ஈடுபட வேண்டிய காவல்துறையினர் மக்களின் குடிசைக்கும், வாகனத்திற்கும் தீ வைத்தார்களே அது என்ன மாதிரியான செயல்? அது ஒழுக்கம் மிகுந்த செயலா?
நடவடிக்கை என்ன ?
அப்படி தீ வைத்தவர்கள் எத்தனைப் பேர் மீது ஒழுங்கின்மை நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? போராட்டத்தில் இளைஞர்களுக்கு உதவிய நடுக்குப்பம், அயோத்திக்குப்பம் மக்களை அடித்துதைத்து ஆபாச மொழிகளால் வதைத்த காவல்துறையினர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதா? அதெல்லாம் ஒழுங்கின்மை செயலின் கீழ் வராதா?
நடவடிக்கை ரத்து
தமிழகக் காவல்துறையின் நற்பெயருக்கு உண்மையிலேயே களங்கம் விளைவிப்பை இவைதான் என்பதைத் தமிழகக் காவல்துறை உயரதிகாரிகள் உணர வேண்டும். எனவே, தமிழக ஆயுதப்படை காவலர் தம்பி மாயழகு மீது எடுக்கப்பட்டிருக்கிற துறைரீதியான நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.