திமுக இல்லாத மதச்சார்பற்ற கூட்டணியை திருமா உருவாக்கலாம்- நாங்க தனித்தே போட்டி: சீமான்
சென்னை: திமுக இல்லாத ஒரு மதச்சார்பற்ற கூட்டணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முன்னெடுக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றது விடுதலைச் சிறுத்தைகள். உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணியில்தான் நீடிப்போம் என திருமாவளவன் கூறி வருகிறார்.
அதே நேரத்தில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்குவோம் எனவும் திருமாவளவன் கூறி வருகிறார். இதனால் அவர் திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் திருமாவளவனின் இந்த மதச்சார்பற்ற கூட்டணி தொடர்பாக புதிய தலைமுறை டிவியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் சீமான் கூறியதாவது:

பாஜகவிடம் ஆதரவு கேட்ட திமுக
நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக வாக்களித்தால் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆதரவாகிவிடும் என்றது திமுக. ஆனால் ஏற்காடு இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பினார் கருணாநிதி.

இந்துக்கள்
திமுகவில் 90% பேர் இந்துக்கள்தான் என்கிறார் ஸ்டாலின். நாளையே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெல்லும் நிலை உருவானால் அக்கட்சியுடன் திமுக கூட்டணி அமைக்கவும் தயங்காது.

திமுக மதச்சார்பற்ற கட்சி அல்ல
ஆக மதச்சார்பற்ற கட்சியாக திமுகவை பார்க்க முடியாது. பாஜகவுடன் இதுவரை காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்தான் கூட்டணி வைக்கவில்லை.

இப்படி செய்யுங்க..
அதனால் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியை அமைக்க முயற்சித்தால் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து ஒரு கூட்டணி உருவாக்கலாம். இதில் திமுகவை சேர்த்துக் கொண்டால் எப்படி மதச்சார்பற்ற கூட்டணியாக இருக்கும்?

தனித்தே போட்டி
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் தனித்துதான் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் மக்களுக்கு நெருக்கமாகி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ச்சியடைய வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications