எளியவர்- குணாளர்- தேசியவாதி- பெருந்தமிழர் முத்துராமலிங்கத் தேவர்: சீமான் புகழாரம்
முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளியவர், குணாளர், தேசியவாதி, பெருந்தமிழர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எளியவர், குணாளர், செயல்வீரர் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தம்முடைய முகநூல் பக்கத்தில் சீமான் வெளியிட்டுள்ள பதிவும் வீடியோவும்:
எனக்குப் பாய்தான் தெரியும்! பட்டுமெத்தைத் தெரியாது!
எனக்கு அடக்கம் தெரியும்! ஆடம்பரம் தெரியாது! - என்ற எளியவர்!
பணத்தைப் பெற்று நல்ல குணத்தை இழந்துவிடாதே!
குணத்தைப் பெற்று நல்ல மனத்துடன் வாழ்வதே
மானுட வாழ்க்கையின் ஆக்கமான நோக்கம்! - என்ற குணாளர்!
மக்களுக்கு நல்லதைச் செய்! அதை உடனே செய்!
செய்வதை வேகமாகவும் செய்! அதற்காக வேலிதாண்டி விடாதே! - என்ற செயல்வீரர்!
நூறு ஏழைகள் ஒரு பணக்காரனை உண்டாக்குகிறார்கள்.
ஒரு பணக்காரனோ ஆயிரம் ஏழைகளை உண்டாக்குகிறான்! - என்ற பாட்டாளிகளின் தோழன்!
நகரத்தைச் சுற்றி பொன்விளையும் பூமிகளையெல்லாம் கூறுபோட்டு விற்பார்கள்!
பாலை விற்பதைப் போல், நாளை தண்ணீரையும் விற்பார்கள்! - என்று இன்று நடப்பதை அன்றே கணித்த தீர்க்கத்தரிசி
தேசியம் எனது உடல்! தெய்வீகம் எனது உயிர்! - என்ற தேசியவாதி!
அறிவு என்பது என்ன? நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்துகொடுக்கிற கருவிதான்! - என்ற அறிஞர்!
சாதியச் சிந்தனை கொண்டவன், அரசியலில் புகுந்தால் நாடு நாசமாகிவிடும்.
சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வழிபடுவதற்கே அருகதையற்றவன்! - என்ற சமத்துவவாதி!
உண்மையைப் பேசு! உறுதியாகப் பேசு! இறுதிவரை பேசு!
மலர்மாலைக்குக் கழுத்தை நீட்டுபவதைப் போல
மரணக்கயிற்றுக்கும் கழுத்தை நீட்டுபவன் எவனோ?
அவனே! உண்மையான வீரன்! - என முழக்கமிட்ட வீரர்!
எல்லாவகையான மாறுதல்களையும் பெற்ற ஆதிமொழி தமிழாகும்! - என்ற பெருந்தமிழர்!
நமது ஐயா தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் உதித்த நாளும், உதிர்ந்த நாளும் ஒன்று! அது இன்று!
பெருமதிப்புக்குரிய நமது ஐயா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில் பெருமிதத்தோடு
அந்தப் பெருமகனுக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்!
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.