மக்களுக்காக போராடுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல... சீமான் !
புதுக்கோட்டை: மக்களுக்காக போராடுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல புர்கான் வானியை சுட்டுக்கொன்றதை ஏற்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன் தன்னை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி இலங்கை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது எந்த அளவுக்கு சாத்தியமானதென தெரியவில்லை. எனினும் அவரது உணர்வை மதிக்க வேண்டும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு நடத்த தனி மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்களின் அருகே அரசு மதுபானக் கடைகள் இயங்கவில்லை என்று கூறி வந்த அ.தி.மு.க. அரசு, தற்போது அந்த பகுதிகளுக்கு அருகில் உள்ள 1000 டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. படிப்படியாக மதுபானக் கடைகளை மூடினால் அது வரவேற்கத்தக்கது.
மீனவர்களின் சிறைபிடிப்பு தினசரி செய்தியாகிவிட்டது. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கமாட்டேன் என அந்நாட்டு பிரதமர் கூறிவரும் நிலையில் இலங்கைக்கு போர்க் கப்பலை இந்தியா வழங்குவது ஏற்படையதல்ல.
காஷ்மீரில் தீவிரவாதி என புர்கான் வானியை சுட்டுக்கொன்றதை ஏற்க முடியாது. இந்த நாட்டில் யார் தீவிரவாதி, பயங்கரவாதி, தேசியவாதி என்ற வரைமுறையே சரியாக இல்லை என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. மக்களுக்காக போராடுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.