இளங்கோவன் உத்தமராகவே இருக்கட்டும் நான் பரதேசியாகவே இருக்கிறேன்: சீமான் பதிலடி
திண்டுக்கல்: ஈவிகேஎஸ் இளங்கோவன் உத்தமராகவே இருக்கட்டும் நான் பரதேசியாகவே இருக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக அரசியல் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை மோடி சந்தித்ததை விமர்சித்து அவர் கூறிய கருத்துகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து சொந்த கட்சியை சேர்ந்த மகளிர் தலைவர் விஜயதரணியை தரக்குறைவாகப் பேசியதாக சர்ச்சையில் சிக்கினார். இது மட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை கரகாட்டக்காரி என விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் இளங்கோவன். அப்போது அவர் அளித்த பேட்டி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பேட்டியில், காங்கிரஸ் பற்றிய நாம் தமிழர் கட்சி சீமானின் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "சில பெயர்கள் அழகாகத்தான் இருக்கும். பரதேசியெல்லாம் சீமான் என்று பெயர் வைத்துக்கொள்வார்கள். ஆனால், அதெற்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை" என்று இளங்கோவன் கூறினார்.
இதுதான் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஆத்துமேடு பகுதியில் சீமான் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் கூறுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றார்.
மேலும் அவர் உத்தமராகவே இருக்கட்டும், நான் பரதேசியாகவே இருக்கிறேன் என்று சீமான் கூறினார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சனங்கள் வைப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.