விவசாயிகளை கடனாளிகளாக ஆக்கியதே திமுக தானே: சீமான் தாக்கு
கோவை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்கிறார்களே அவர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடுவோம் என்று வாக்குறுதி அளிப்பார்களா? என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெஞ்சமின் பிராங்கிளின் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கோவை ஒலம்பஸ் கந்தசாமி வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசுகையில்,

ஸ்டாலின்
எதிர்கால தமிழர்களுக்காக வாழ்க்கை கேட்டு உங்களிடம் வந்துள்ளோம். மு.க. ஸ்டாலின் மக்களை சந்தித்து என்ன பிரச்சனை உள்ளது என்று கேட்கிறார். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தபோது எல்லாம் மக்களின் பிரச்சனை என்னவென்று தெரியலையா? முன்பு செய்த தவறுகளுக்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார்.

என்ன செய்தார்கள்?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களே உங்களுக்காக அதை செய்வோம், இதை செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளிவிடுகிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபோது என்ன செய்தார்கள்? விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை கடனாளிகளாக ஆக்கியதே அவர்கள் தானே.

மதுக்கடைகள்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்கிறார்களே அவர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடுவோம் என்று வாக்குறுதி அளிப்பார்களா? முதலில் உங்களின் மது ஆலைகளை மூடுங்கள். இந்த தேர்தல் பணநாயக்கத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான போர், தீய ஆட்சிக்கும், தூய ஆட்சிக்கும் இடையேயான போர்.

வாக்கு
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 5 இடங்களை தலைநகராக மாற்றுவோம். கோவை மாநகரை தொழில் வர்த்தக தலைநகர் ஆக்குவோம். திருச்சியை நிர்வாக தலைநகராக ஆக்குவோம். மக்கள் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications