தமிழக அரசியலுக்கு ரஜினி தேவையில்லை.. சீமான் பொளேர் !
தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க நாங்கள் இருக்கிறோம். எனவே தமிழக அரசியலுக்கு ரஜினி தேவை இல்லை என்று சீமான் கூறியுள்ளார்.
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த ரஜினி தனது கடைசி நாள் உரையில் பேசியது அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இதனை கடுமையாக சீமான் எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை என்றும், அவர் வந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தாங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் பச்சை தமிழன் என்று நடிகர் ரஜினி கூறும் நிலையில், மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகள் தாங்கள் இருந்தால் மராத்தியராகி விட முடியுமா? என சீமான் கேள்வி எழுப்பினார். வெள்ளையர்கள் நூறு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி புரிந்ததால், அவர்கள் தமிழர்கள் ஆகி விட முடியாது எனவும் சீமான் குறிப்பிட்டார்.