குடியுரிமைச் சட்டம்.. உங்க கருத்து என்ன.. அதைச் சொல்லுங்க.. ரஜினிக்கு சீமான் சுளீர் கேள்வி
Recommended Video
சென்னை: வன்முறை செய்தது யார்.. போராடும் மாணவர்களை இதை விட கொச்சைப்படுத்தி விட முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த்துக்கு நாம் தமிழர் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களான ஜாமி மில்லியா இஸ்லாமியா உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் வீறு கொண்டு போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களில் மக்களும் தற்போது பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பல மாநிலங்களில் தடை உத்தரவுகளை காவல்துறை பிறப்பித்துள்ளது. இணைய சேவைகளும் பல பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பலர் எதிர்த்து தெரிவித்துள்ளனர். பலர் ஆதரித்துக் கூறியுள்ளனர். இந்த நிலையில்தான் அரசியலுக்கு வரப் போவதாக மட்டுமே கூறிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த்தும் ஒரு கருத்தை நேற்று ராத்திரி சத்தம் போடாமல் தனது டிவிட்டரில் போட்டு விட்டிருந்தார்.
அதைப் பார்த்த பலருக்கும் வியப்பு.. காரணம் என்ஆர்சி குறித்தோ அல்லது சிஏஏ குறித்தோ அவர் எந்த கருத்தையும் கூறவில்லை. மாறாக போராட்டக் களத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூறும் வகையிலான ஒரு பொத்தாம் பொதுவான கருத்தை போட்டிருந்தார்.
— Rajinikanth (@rajinikanth) December 19, 2019
அது இதுதான்... எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?
— சீமான் (@SeemanOfficial) December 19, 2019
குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!
அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!
இதற்கு தற்போது சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு நேரடியான பதிலையும் ரஜினியிடமிருந்து கேட்டுள்ளார். இதுதொடர்பாக சீமான் போட்டுள்ள டிவீட்டில், பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?
குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!
அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என்று சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
ரஜினி கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் கூடவே ரஜினி ஆதரவாளர்களின் ஆதரவும் குவிந்து கொண்டிருக்கின்றன.