சைக்கிளில் வலம் வந்த சர்வேயர் திண்டுக்கல் ரத்தினத்தின் "லைஃப்சைக்கிள்" மாறிய கதை இது!
சைக்கிளில் வலம் வந்த திண்டுக்கல் ரத்தினம், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதியானது எப்படி என்பது பற்றி இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்: சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஒரு கிராமம். ஆனால் எல்லோரும் கூப்பிடுவது திண்டுக்கல் ரத்தினம். ஊர் மாறி வந்து இன்று உலகப் புகழ் பெற்று விட்டார் ரத்தினம்.
சாதாரண சர்வேயராக வலம் வந்தவர் இவர். சைக்கிள்தான் இவரது வாகனம். இன்று இவரிடம் குவிந்து கிடக்கும் சொத்துக்களுக்கும், ஆஸ்தி பாஸ்திகளுக்கும் குறைவே இல்லை. எல்லாம் மணலால் வந்த சொத்துக்கள் பணங்கள். இன்று சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ரத்தினம்.
முத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம். மனைவி, 2 மகன்களுடன் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். புகழ் பெற்ற ஜிடிஎன் கல்லூரியின் அதிபர். ஆரம்பத்தில் இவர் நில அளவைத் துறையில் சர்வேயராக இருந்து வந்தார்.

திண்டுக்கல் ரத்தினம்
1980ம் ஆண்டு இடமாறுதலில் திண்டுக்கல் வந்து சேர்ந்தார். வந்த இடத்தில் இவருக்கு அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைத்தது. அவர்களின் ஆலோசனைப்படி அரசு வேலையை விட்டு விட்டு ரியல் எஸ்டேட்டில் குதித்தார். அதில் லாபம் கிடைக்கவே அப்படியே தொழிலை விரிவாக்கி, செங்கல் சூளை, ஜல்லி ஆலை என விரிவடைந்தார்.

மணலில் பணம்
அப்போதுதான் இவருக்கு மணல் குவாரி தொழிலில் பரிச்சயம் ஏற்பட்டது. அதற்குப் பிறகுதான் இவர் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனாராம். புதுக்கோட்டை ராமச்சந்திரனுடனும், சிவகங்கை படிக்காசு என்பவருடனும் ஏற்பட்ட தொடர்புகள் இவரை எங்கேயோ கொண்டு போய் விட்டன. கூட்டாளிகளுடன் பங்கு போட்டு மணலை வைத்து பணத்தை அள்ள ஆரம்பித்தார்.

சேகர் ரெட்டியுடன் தொடர்பு
இந்த பிசினஸில்தான் சேகர் ரெட்டியின் அறிமுகமும் கிடைத்தது. அதன் பிறகு மாநில அளவில் மிகப் பெரிய அளவில் இவரது குவாரி தொழில் விரிவடைந்தது. ரெட்டியுடன் தொழில் கூட்டாளியாக இணைந்தார். ரெட்டிக்குத் தேவையானதை இவர் செய்ய, இவருக்குத் தேவையானதை அவர் செய்ய என இருவரும் கொடி கட்டிப் பறந்துள்ளனர்.

குவிந்த சொத்துக்கள்
ரத்தினத்திற்குச் சொத்துக்களுக்குப் பஞ்சமே இல்லை. பிரமாண்டமான திண்டுக்கல் ரத்தினம் விலாஸ் இவரது ஹோட்டல்தான். சென்னையிலும் வீடுகள் உள்ளன. தரணி குழுமம் என்பது இவரது ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய கோடீஸ்வரராக உயர்ந்தவர்களில் ரத்தினத்திற்கும் முக்கிய இடம் உண்டு. எல்லாம் மணல் குவாரி தொழிலில் கிடைத்த கொள்ளை லாபம்தான்.












Click it and Unblock the Notifications