'சுயநல' தா.பாண்டியனால் நடுத்தெருவில் நிற்கும் இடதுசாரிகள்..
சென்னை: தமிழகத்திலும் தேசிய அளவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு சுயமரியாதை இழந்து நிற்பதற்கு முழு முதல் காரணமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் மட்டுமே என்று குமுறுகின்றனர் இடதுசாரிகள்.
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் கொள்கைகளில் மாறுபட்ட நிலை கொண்டவர்கள் கூட மரியாதை காட்டி வந்தனர். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தமது போணியாகாத யு.சி.பி.ஐ என்று தா. பாண்டியன் இணைத்து மாநிலச் செயலர் பதவியை பிடித்தாரோ அன்றே தமிழகத்தில் இடதுசாரிகளின் சுயமரியாதைக்கு சமாதி கட்டிவிட்டார் தா.பாண்டியன் என்பதுதான் நிதர்சனம்.

தா.பா.வா? ஓ.ப.வா?:
"விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.ப.வா? என்றும் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலர் தா. பாண்டியன் என்றும் நாறடித்த பின்னரும் பதவி மோகத்தில் மூழ்கிப் போனவராக அடிமை விசுவாசமெனும் ஆழக் குழியில் அமிழ்ந்து போனவராகத்தான் வலம் வருகிறார் தா. பாண்டியன்.

களப்பலியான கம்யூனிஸ்டுகள்
இப்படிப்பட்ட தா. பாண்டியனை முற்று முழுதாக நம்பி ஓரிரு லோக்சபா, ராஜ்யசபா சீட்டு பேரங்களுக்காக தங்களையே களப்பலியாக்கிக் கொண்டிருக்கின்றனர் மார்க்சிஸ்ட் காம்ரேடுகள்.. "லீலாவதிகளை" போராளிகளாக்கிய மார்க்சிஸ்ட் கட்சி தா.பாண்டியனை நம்பியது அதன் வரலாற்றுப் பிழையே.

மகனுக்கு பதவி வாங்கிய தா.பா.
தமது மகனுக்கு சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியை எப்படியாவது பெற்றுவிட ராஜ விசுவாசம் காட்டி கடைசியில் பதிவாளர் பதவியை அபகரித்துக் கொண்ட தா. பாண்டியனின் சுயநல அரசியலை உணர்ந்தும். அவரை நம்பி தேர்தல் களத்துக்குப் போனது சங்கரய்யாகளும் நல்லகண்ணுகளும் உலா வரும் தமிழக இடதுசாரிகளுக்கு அழிக்கவே முடியாத வரலாற்று இழிவு.

தெருவுக்கு வந்த இடதுகள்
கடந்த சட்டசபை தேர்தலில் சுயமரியாதையோடு இடதுசாரிகள் தேமுதிகவை அணுகிய போதும் போயஸ் தோட்டத்து போர்டிகோவில் காத்து காத்து இன்னும் இன்னும் ஆதாயம் கிடைக்குமா என்று நின்று கொண்டிருக்கிற தா.பாண்டியன் என்ற தனி மனிதனின் சுயநல சூதாட்டத்துக்கு இப்போது இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் அசிங்கப்பட்டு தெருவில் நிற்கின்றனர்.

மூன்றாந்தர அரசியல்...
ஜாதி, மதத்தை எதிர்த்து அரசியல் பேசுகிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஜாதிய அரசியலைக் கொண்டு வந்த அரசியல்வாதி தா. பாண்டியன் என்ற குற்றச்சாட்டும் இடதுசாரிகள் மத்தியில் உள்ளது. எப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தா.பாண்டியன் களை எடுக்கப்படுகிறாரோ அப்போதுதான் இடதுசாரிகளுக்கு "பாப விமோசனம்" கிடைக்கும்.

அதிமுக விசுவாசம்
அதிமுக கூட்டணியில் இடதுசாரிகள் இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு திருச்சியில் கதறி அழுகிற தா. பாண்டியன் அப்போதுகூட அதிமுகவின் கிளைக் கழக செயலரை விட கேவலமாக அக்கட்சிக்கு எப்படியெல்லாம் விசுவாசமாக இருந்தேன் என்கிறார். அதென்னவோ உண்மைதான்.. திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க காங்கிரஸ் கட்சிக்காக வேலை பார்த்த கம்யூனிஸ்ட் தலைவர் கலியாணசுந்தரத்துக்கு விசுவாசமிக்கவராக இருந்தது தா.பாண்டியன் அல்லவா? அதிமுக பாசம் இருக்கத்தானே செய்யும்..

சரியப் போகுது செங்கொடி கோட்டை
இந்த தா.பாண்டியன் என்ற தனி மனிதரால் இன்று நடுத்தெருவில் நிற்கதியாக தனித்துவிடப்பட்ட இடதுசாரிகள்.. இனியேனும் 'சுயமரியாதை'யை காப்பாற்றிக் கொள்ளக் கூடிய முடிவை எடுப்பதுதான் கட்டாயம்.. இல்லாவிட்டால் அளப்பரிய தியாகங்களின் மீது கட்டமைக்கப்பட்ட செங்கொடி கோட்டை சரிவது சரித்திரமே..

வெண்ணெய் எடுக்கும் தா.பா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, "சிபிஐ கூட்டணி அமைத்து தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும். வெண்ணெய் உருண்டு வரும் போது தாழிச் சட்டியை உடைக்கக் கூடாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக வெண்ணெய் எடுக்கும்." என்று பேசியிருக்கிறார் தா. பாண்டியன். அவர் வெண்ணைய் எடுத்து வியாபாரம் செய்யப்பட்டும்... விழுங்கித் தொலையட்டும்.. அவரை நம்பி மீண்டும் மீண்டும் தன்மானமுள்ள இடதுசாரிகள் "வீணாயும் பாழாயும்" போய்விடக் கூடாது என்பதுதான் இடதுசாரிகளின் தோழமைக் கட்சிகளின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications