நகரத்தார் சமூகம் குறித்த சர்ச்சைக் கருத்து... வருத்தம் தெரிவித்தார் செல்லூர் ராஜூ
காரைக்குடி ஆச்சிகள் குறித்து நான் கூறிய கருத்துகளால் நகரத்தார் சமூகம் மனம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருந்துகிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை: காரைக்குடி ஆச்சிகள் குறித்து நான் கூறிய கருத்து நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தியிருப்பதால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
காலா பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, நதி நீர் இணைப்புதான் எனது வாழ்நாள் கனவு என்றும் நேரம் வரட்டும் ஆண்டவன் துணையுடன் மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நல்ல நேரம் பிறக்கும் என்றும் பேசியிருந்தார். இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
காரைக்குடி
அதற்கு அவர் பதிலளிக்கையில், நதி நீர் இணைப்பு குறித்து ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழகத்தில் அவரால் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமென்றால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று கூறியிருந்தார்.
போர்க் கொடி
இது நகரத்தார் சங்கம் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருமணமான பெண்களை ஆச்சி என்று அழைக்கும் மரியாதைக்குரிய வார்த்தையை அமைச்சர் கேலி செய்துள்ளார் என்று காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினர்.
தவறாக சித்தரிப்பு
இதுகுறித்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் நான் நகரத்தார் சமூகத்தை மதிக்கிறேன். நான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
வருந்துகிறேன்
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அப்படி பேசவில்லை. நகரத்தார் சமூகம் மனம் புண்பட்டிருப்பதால் மிகவும் வருந்துகிறேன் என்று கூறி வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.