தர்மத்தை சாகடிக்கிறார் செங்கோட்டையன்... கேபி.முனுசாமி கொந்தளிப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தர்மத்தை சாகடிப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெயலதாவை மருத்துவமனையில் பார்த்ததக கூறுவது பொய் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். சசிகலாவை காப்பாற்ற செங்கோட்டையன் தர்மத்தை சாகடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று சேலம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது மருத்துவமனையில் ஜெயலலிதாவை தான் பார்த்ததாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நான் அவரை நேரடியாகப் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார்.
இரண்டு விரலை அசைத்தாரா ஜெ.?
என்னைப் பார்த்து இரண்டு விரலை அசைத்தார் என்றும் பேசியிருக்கிறார். அதிமுகவில் செங்கோட்டையன் கட்சிக்காக நன்றாக உழைத்துப்பாடுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு தொண்டர், தர்மமே சாகின்ற அளவில் ஒரு தவறான கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
யாரும் பார்க்க முடியவில்லை
ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தவரையில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர் அமித்ஷா என்று எல்லோரும் அப்பல்லோ வந்தாலும் கூட அங்கிருப்பவர்களிடம் எப்படி இருக்கிறார் ஜெயலலிதா என்று கேட்பார்கள். வெளியில் வந்து, அவர் நன்றாக இருக்கிறார் என்று மட்டும்தான் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
அவரும் எங்களைப்போல் தான் வருவார்
இதுவரையில், அவரை நேரடியாக மருத்துவமனையில் பார்த்ததாக யாரும் சொல்லவில்லை. செங்கோட்டையன் எங்களைப் போலவே, தினமும் வருவார். நாங்கள் எங்கே உட்காருகிறோமோ அங்கே உட்காருவார்.
தேர்தல் பணியில் இருந்தார்
வருத்தத்தோடு எங்களுடன் கலந்துரையாடுவார். சென்றுவிடுவார். அதிலும் அந்த நேரத்தில் இரண்டு தேர்தல் வந்தது. அதனால் 20 நாட்கள் தேர்தல் பணியில் இருந்தார்.
தர்மத்தை சாகடிக்கிறார்
அவர் கூறுகிறார், ஜெயலலிதாவை கண்ணாடி வழியாகப் பார்த்தேன். இரண்டு விரல்களைக் காட்டினார் என்று. யாரைக் காப்பாற்றுவதற்காக ஒரு தர்மத்தைச் சாகடித்துக்கொண்டிருக்கிறார்.
சசிகலாவை காப்பாற்றுவாகிறாரா?
சசிகலாவைக் காப்பாற்றுவதற்காக இவ்வளவு பெரிய உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலைச் சொல்லுகிறாரே, இவர் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு ஒரு துரோகம்செய்திருக்கிறார். இது, கடைசியாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
சசி கட்டுப்பாட்டில் இருந்தார் ஜெ.
காரணம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரை யாரும் பார்க்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியவர், சசிகலா. அவர் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதா இருந்தார்.
உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்
அப்படிப்பட்ட நிலையில், தான் ஜெயலலிதாவைப் பார்த்ததாகக் கூறி, சசிகலாவைக் காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சிசெய்கிறார். இதனை உடனடியாக அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்தால், வேறுவிதமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவேண்டிவரும்". இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.