திருமாவளவனைத் தோற்கடிக்க சிதம்பரத்திற்கே 'ஷிப்ட்' ஆன செங்கோட்டையன்!
சிதம்பரம்: திமுக சார்பில் சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக தீவிர பிரசாரப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் சிதம்பரத்திற்கு வந்து தங்கி விட்டார்.
அங்கு அவர் வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருகிறாராம். இதனால் அதிமுகவினரும் உற்சாகமாக இறங்கியுள்ளனர்.
சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார் செங்கோட்டையன். இதையடுத்து அவருக்காக ஒரு தனி வீடு பார்க்கப்பட்டது. அந்த வீட்டில்தான் தற்போது செங்கோட்டையன் தங்கி தேர்தல் பணிகளைக் கவனிக்க ஆரம்பித்துள்ளார்.
மேலப் புதுத் தெருவில் இந்த வீடு உள்ளது. இங்கு செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் படு சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதிமுகவினர், கூட்டணிக் கட்சிகளுடன் தினசரி ஆலோசனை, திட்டமிடல், பிரசார உத்திகள் என படு பிசியாக இருக்கிறாராம் செங்கோட்டையன்.
வெற்றிக்கனியைப் பறித்து, அம்மா கையில் கொடுத்து மீண்டும் அமைச்சர் பதவியை வாங்கி விட வேண்டும் என்ற உத்வேகத்தில் செங்கோட்டையன் இருப்பதாக கூறுகிறார்கள்.