அதிமுக மூத்த தலைவர்கள் நெருக்கடி- எந்த நேரத்திலும் முதல்வர் ஓபிஎஸ் ராஜினாமா?
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யக் கூடும் என தெரிகிறது.
சென்னை: தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் எந்த நேரத்திலும் நீக்கப்படும் அல்லது ராஜினாமா செய்யும் நிலைமை உருவாகியுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் பகிரங்கமாக வலியுறுத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவின் போது முதல்வராக சசிகலா முயற்சித்தார். ஆனால் மத்திய பாஜக அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.
இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசுடனான சமாதான நடவடிக்கைகளை சசிகலா தரப்பு மும்முரமாக மேற்கொண்டது. இதன் விளைவாக சசிகலா, அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். அவரும் பொதுச்செயலர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

சசிக்கு ஆதரவு குரல்
இதன்பின்னர் சசிகலாவே முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என அமைச்சர் உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். தற்போது அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்துகின்றனர்.

போர்க்கொடி
லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்பு செயலருமான தம்பிதுரை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கட்சியும் ஆட்சித் தலைமையும் இருவரிடத்தில் இருப்பது சரியல்ல என கூறி பன்னீர்செல்வத்துக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கினார்.

எந்த நேரத்திலும் ராஜினாமா
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரும் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தமக்கான நெருக்கடி அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்றே தெரிகிறது.

திருமங்கலத்தில் போட்டி
அத்துடன் சசிகலாவுக்காக அமைச்சர் உதயகுமார் ராஜினாமா செய்வார்; இதைத் தொடர்ந்து உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications