ஊழல்வாதி சேகர் ரெட்டி கூட்டாளி ரத்தினத்துக்காக வக்கீலாக ஆஜரான காங். அபிஷேக் சிங்வி
ஊழல்வாதி சேகர் ரெட்டியின் கூட்டாளியான மணல் வியாபாரி திண்டுக்கல் ரத்தினத்திற்காக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி சிபிஐ கோர்ட்டில் ஆஜரானது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: காண்டிராக்டர் சேகர் ரெட்டியின் கொள்ளைக் கூட்டாளிகளில் ஒருவரான திண்டுக்கல் மணல் வியாபாரி ரத்தினத்துக்காக சிபிஐ கோர்ட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மனு சிங்வி ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் தொழில் வேறு, அரசியல் வேறு என்று அவர்கள் கூறினாலும் கூட தமிழகத்தின் வளத்தைச் சுறண்டிக் கைதாகியுள்ள ஒரு நபருக்கு ஆதரவாக சிங்வி ஆஜரானது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிங்வி கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணல் கொள்ளையர்கள்
சேகர் ரெட்டி கைதானபோது அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டவர்கள்தான் புதுக்கோட்டை ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் ரத்தினம். ரத்தினத்திற்கும் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிதான். திண்டுக்கல்லில் செட்டிலானதால் திண்டுக்கல் ரத்தினம் என அழைக்கப்படுகிறார்.

சேகர் ரெட்டியின் தொழில் கூட்டாளிகள்
ராமச்சந்திரனும், ரத்தினமும் சேகர் ரெட்டியின் தொழில் கூட்டாளிகள் ஆவர். இந்த மூன்று பேரும் சேர்ந்து தமிழகத்தின் மிகப் பெரிய மணல் கொள்ளையர்களாக வலம் வந்துள்ளனர். இவர்கள்தான் மணல் வியாபாரத்தையும் மிகப் பெரிய அளவில் கட்டுக்குள் வைத்திருந்துள்ளனர்.

"கல்வித் தந்தை"யான கொடுமை!
இதில் கிடைத்த அபரிமிதமான பணத்தைக் கொண்டு திண்டுக்கல்லின் பிரபலமான ஜிடிஎன் கல்லூரியையை வளைத்து வாங்கிப் போட்டார் ரத்தினம். இதனால் கல்வித் தந்தை என்ற போர்வைக்குள் புகுந்தார். திமுக, அதிமுகவின் மாஜி அமைச்சர்களின் கருப்பை வெள்ளையாக்கும் பணியை கச்சிதமாக செய்தவர் திண்டுக்கல் ரத்னம் என்ற பேச்சும் உண்டு. இத்தனைக்கும் அரசு சர்வேயராக வாழ்க்கையை தொடங்கியவர்தான் இந்த ரத்னம்.

கைது
சேகர் ரெட்டி கைதைத் தொடர்ந்து அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ராமச்சந்திரனும், ரத்தினமும் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான் ரத்தினத்திற்கு ஆதரவாக சிங்வி சிபிஐ கோர்ட்டில் ஆஜராகியுள்ளார்.

அபிஷேக் சிங்வி
மூத்த வழக்கறிஞரான சிங்வி சென்னைக்கு வந்து சிபிஐ கோர்ட்டில் ரத்தினத்தின் வக்கீலாக நேற்று ஆஜரானார். தான் ரத்தினத்திற்காக ஆஜராவதாக சிங்வி தெரிவித்தபோது அதற்குப் பதிலளிக்க சிபிஐ தரப்பு அவகாசம் கேட்டது. இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளான ரத்தினம், ராமச்சந்திரன் மற்றும் ஸ்ரீனிவாசலு ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications