மயிலாப்பூரில் சீட் வாங்கிய மாஜி டிஜிபி நட்ராஜ்... புது வாழ்வு பெற்ற பொன்னையன்... !
சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேட்டியினால் தவறுதலாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் ஒரே நாளில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் மயிலாப்பூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலரின் சீட் காலியாகியுள்ளது. புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் கட்சியில் பல ஆண்டுகளாக விசுவாசிகளாக உள்ள பழைய முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் குருநாதர் திண்டுக்கல் சீனிவாசனின் அன்புக்கு பாத்திரமாக விளங்கிய சாதாரண கட்சித் தொண்டரான விஸ்வநாதன்தான் பிற்காலத்தில் மந்திரி, ஐவர் குழு என்று மள மளவென ஏற்றம் பெற்று நத்தம் விஸ்வநாதனாக உயர்ந்தார். இன்று அவரது மாவட்டத்தில் நத்தம் ஆதரவு பெற்ற ஒருவர்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். கட்சியில் பொருளாளர் வரை உயர்ந்து, பின் சரிந்த திண்டுக்கல் சீனிவாசன் இப்போது திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் குருநாதர் தங்க.தமிழ்ச் செல்வன் சில காலம் ஒதுக்கப்பட்டிருந்தார். அவருக்கு கட்சி பதவி அளித்த கையோடு மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் ஜெயலலிதா.
இதேபோல முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த பொன்னையன் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.
எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவில் இருந்து பின்னர் பாமக, தேமுதிக என சென்று மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
1991ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேராசிரியர் கற்பகம் இளங்கோவிற்கு இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் காரைக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் ஜெயலலிதா.
கடந்த சில ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் எம்.எல்.ஏ முருகையா பாண்டியனுக்கு அம்பாசமுத்திரம் தொகுதி கிடைத்துள்ளது.
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆ.தமிழ்மகன் உசேன் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல குமரி மாவட்டத்தில் நீண்டகாலமாக ஓரம்கட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் இம்முறை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதேபோல் அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த கே.ஏ. செங்கோட்டையன் சில ஆண்டுகாலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். இம்முறை அவருக்கு மீண்டும் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார். இவரும் சில காலம் கட்சியில் இருந்து ஒரங்கட்டப்பட்டிருந்தார். இம்முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சேலம் வடக்குத் தொகுதியில் போட்டியிட செம்மலை விருப்பமனு அளித்திருந்தார். இம்முறை எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும் என்று காய் நகர்த்தினார். சில தினங்களுக்கு முன்பு செம்மலையை போயஸ் கார்டனுக்கு அழைத்துப் பேசினார் ஜெயலலிதா. அப்போது சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் செம்மலையில் பெயர் இடம் பெறவில்லை.












Click it and Unblock the Notifications