செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் ஆதரவாளர்கள் ரவுண்ட் அப்! பயத்தில் காரை விட்டு இறங்காத ஓட்டுநர்!
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டதால் பயத்தில் காரை விட்டு இறங்காமல் ஐடி அதிகாரிகளின் கார் ஓட்டுநர் காருக்குள்ளேயே பல மணி நேரம் அமர்ந்திருந்தார்.
கார் கண்ணாடியை ஒருவர் திடீரென உடைத்த பிறகு தான் அலறியடித்து காரை விட்டு இறங்கிய அந்த ஓட்டுநர், மேற்கொண்டு கார் சைடு கண்ணாடியை உடைக்க முற்பட்ட நபரை தடுத்தி நிறுத்தினார்.
இருப்பினும் யார் மீதோ காட்ட வேண்டிய கோபத்தை வாடகைக்கு கார் ஓட்ட வந்த ஓட்டுநர் மீது அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் ஆதரவாளர்கள் காட்டினர்.
கரூரில் சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த இன்னோவா கார் சென்னை பதிவெண் கொண்ட வாடகை வாகனமாகும்.
இதனிடையே கார் ஓட்டுநருடன் காவல்நிலையம் விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஓட்டுநரை வைத்து புகார் கொடுக்க வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுமட்டுமல்ல இளம் ஐடி அதிகாரி ஒருவரை அவரது சட்டையில் கை வைத்து இழுத்துச் சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் ஆதரவாளர்கள், பையில் என்ன இருக்கிறது எனக் கேட்டு தாக்க முற்பட்டனர்.
இந்த நிகழ்வுகளெல்லாம் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பெரும் பின்னடைவை தான் தரும் என்பதில் சந்தேகமேயில்லை.
தங்கள் மீதே கை வைக்கத் துணிந்ததை வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் யாரும் ரசிக்கவில்லை என்றும் இதன் விளைவுகள் விரைவில் தெரியகூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.