பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார்.. அதிர்ச்சியில் மனைவியுடன் தற்கொலைக்கு முயற்சித்த நீதிபதி
திருச்சி: நீதித்துறை பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரில் சிக்கி உயர்நீதிமன்றத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட நீதிபதி ஒருவர், தனது மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2 வாரத்துக்கு முன்பு தஞ்சை மாவட்ட செசன்ஸ் நீதிபதி டி.எஸ்.நந்தகுமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் ஒரு நீதிபதி ஆகிய இருவர் மீதான பல்வேறு புகார்கள் காரணமாக அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இதில் நந்தகுமார் மீது நீதித்துறை பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகரா் கூறியிருந்தார். அவரை சஸ்பெண்ட் செய்த உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் தங்கியிருக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தனது மனைவி ரேவதியுடன் திருச்சி வந்து ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார்.
இந்த நிலையில் அவர் தனது மனைவியுடன் விஷம் குடித்து விட்டார். அவரது அறைக் கதவு திறக்காமல் இருந்ததால் ஹோட்டல் ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து கதவை உடைத்துத் திறந்தனர். அப்போது மயங்கிய நிலையில் இருவரும் கிடந்ததைப் பார்த்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.