வெளி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர டிஜிபி உத்தரவு!
கருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவால் சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவால் சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் உடனடியாக சென்னை வர வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதலே மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு தொற்றியது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட அவரது குடும்பத்தினர் பலரும் மருத்துவமனையில் குவிந்தனர்.

6வது அறிக்கை
இதனால் என்ன ஆனதோ, தலைவர் எப்படி உள்ளாரோ என்ற பீதி தொண்டர்களிடையே ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை கருணாநிதியின் உடல்நிலை குறித்த 6வது அறிக்கையை வெளியிட்டது காவேரி மருத்துவமனை.

எதுவும் சொல்ல முடியும்
யாரும் சற்றும் எதிர்பாராத அறிக்கையாக இருந்தது அது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

போலீஸ் குவிப்பு
இதனால் அதிர்ந்த தொண்டர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு படையெடுத்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

4 உதவி ஆணையர்கள்
காவேரி மருத்துவமனை முன்பு மட்டும் 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
நேற்றிரவே சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். போக்குவரத்து மற்றும் காவல் துணை ஆணையர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

உச்சக்கட்ட பாதுகாப்பு
இந்நிலையில் சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் அதிகளவு குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சென்னை வரவேண்டும்
இந்நிலையில் வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் உடனடியாக சென்னைக்கு வர வேண்டும் என டிஜிபி உத்தரவி பிறப்பித்துள்ளார். அனைத்து ஆணையர்கள், மண்டல காவல்துறை தலைவர்கள், துணைத் தலைவர்கள், எஸ்பிக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
— Oneindia Tamil (@thatsTamil) August 7, 2018 |
டிஜிபி உத்தரவு
அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மண்டல ஜஜிக்களும் தேவையான ஆட்களை பயன்படுத்திக்கொள்ளவும் டிஜிபி அனுமதி அளித்துள்ளார். மேலும் காவல்துறையினர் அனைவரும் சீருடையில் தயாராக இருக்க வேண்டும் என்றும் டிஜிபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications