சேது திட்டம், தமிழக நதிநீர் உரிமைகளைப் பெற பாடுபடுவோம்: மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கை!
மதுரை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவும் நதிநீர்ப் பங்கீட்டில் தமிழக உரிமைகளைப் பெறவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்று அக் கட்சியின் தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அளவிலான தேர்தல் அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று மதுரையில் வெளியிட்டார்
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:
சேது கால்வாய் திட்டம்
தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத் தேவையாக இருக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மதச் சாயம் பூசப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் இத் திட்டம் தொடர்பான வழக்கில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருவழி ரயில் பாதைகள்
சென்னை - கன்னியாகுமரி, சென்னை - திருச்சி உள்ளிட்ட அனைத்து ரயில் பாதைகளையும் இருவழிப் பாதைகளாக மாற்ற வேண்டும். இப் பாதைகளை மின்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்ற கிளை
சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையைத் துவக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் தமிழை நீதிமன்ற மொழியாக நிறைவேற்ற வேண்டும். தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை, மத்திய அரசின் ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
காவிரி ஆணையம்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேம்பாட்டு ஆணையத்தையும், காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுவையும் தாமதமின்றி மத்திய அரசு அமைத்து தமிழகத்துக்கு உரிமையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு நிறைவேற்ற வேண்டும். இப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு முன் உள்ள வழக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
மீத்தேன் திட்டம்
டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கும் நோக்கோடு அமையவுள்ள மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இதற்கென போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
எரிவாயு குழாய்
மேற்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், விவசாயிகளையும் பாதிப்படையச் செய்யும் வகையில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஈழத் தமிழர் படுகொலை
இலங்கையில் ராணுவ அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கவும், வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வரவும், அதை தமிழகத்தில் அமல்படுத்தவும், உள்ளாட்சிகளுக்கு உரிய அதிகாரத்தை பெற்றுத் தரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்.
இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.