தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு.. குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட பகுதியில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீருக்காக பெண்கள் குழாயடியில் குடங்களை வரிசையாக வைத்து நீண்ட நேரம் காத்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பஞ்சாயத்து மூலம் தெருக்குழாய்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது கடும் வறட்சி நிலவுவதால் கிராமத்தில் உள்ள ஆழ்துளைகிணறுகளிலும் நிலத்தடி நீராதாரம் குறைந்துவிட்டது. இதனால் பஞ்சாயத்து மூலம் அவ்வப்போது வழங்கப்படும் குடிநீரை பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து குடங்களை வரிசையாக வைத்து தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் அதிக ஆழத்தில் ராட்சச போர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி மினிவேன் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த கிராம மக்கள், இதனால் பிற ஆழ்துளைகிணறுகளில் நிலத்தடி நீராதாரம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
எனவே கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் பஞ்சாயத்து மூலம் சீரான குடிநீர் வழங்கவும், ஆழ்துளைகிணறுகளில் தண்ணீரை உறிஞ்சி மினிவேன், லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவதை பஞ்சாயத்து சிறப்பு அதிகாரி தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.