நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன்... 22 மணி நேர விசாரைணைக்குப் பின் கைது
புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய விவகாரத்தில் உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
விருதுநகர் : புரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களில் ஒருவரான மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவிகளுக்கு சலுகை, பண ஆசை காட்டி உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வைக்க நினைத்த புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ ஏப்ரல் 15ம் தேதி வெளியான நிலையில் பல்கலைக்கழகங்களில் மாணவிகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் அம்பலமானது. இந்த விவகாரத்தில் கடந்த 16ம் தேதி நிர்மலா தேவி அருப்புகோட்டையில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த 18ம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி போலீசார் நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி மற்றும் சக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியது. இதனைத்தொடர்ந்து நிர்மலா தேவியின் வீட்டிலும் ஆதாரங்களைத் தேடி சோதனை நடத்தியது.
நிர்மலாதேவியிடம் 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்திய போது அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், கருப்பசாமி இருவர் பெயரை கூறியுள்ளதாக தெரிகிறது. கருப்பசாமி தலைமறைவாக உள்ள நிலையில் முருகனிடம் நேற்று பகல் 1.30 மணி முதல் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சோதனை நடத்தப்பட்டது.
9 பேர் கொண்ட குழுவினர் 22 மணி நேரம் முருகனிடம் நடத்திய விசாரணையில் நிர்மலாதேவிக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டுள்ள முருகன் விரைவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.