தஞ்சை: கருணை இல்லத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... பாஸ்டர் கைது
தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் கருணை இல்லத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பாஸ்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் அன்னை தெரசா கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆதரவற்ற பெண் குழந்தைகள் சுமார் 25 பேர் தங்கி, டிஇஎல்சி பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் எங்கள் இல்லத்தில் காப்பாளராக உள்ள பாஸ்டர் ராஜா டேவிட் என்பவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். தனக்கும், என்னைவிட வயது குறைவான 3 மாணவிகளுக்கும் பாஸ்டர் ராஜா டேவிட் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலிசார் பாஸ்டர் ராஜா டேவிட்டை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கருணை இல்லத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாஸ்டரே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.