பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்ப்பதா? - நெல்லையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டம்
தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி சிவசேனா நிர்வாகி போராட்டம் நடத்தினார்.
நெல்லை: தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகள் வைத்துள்ள பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை ரயில் நிலைய சந்திப்புக்கு எதிரே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி ஒருவர் போராட்டம் நடத்தினார்.
தாமிரபரணியைக் காக்க மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தியவரின் பெயர் ரமேஷ் என்பதாகும். இவர் சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தலைவராகவும் ரமேஷ் இருந்து வருகிறார். குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்.

வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து பெப்சி, கோகோ கோலா ஆகிய குளிர்பான ஆலைகள் லட்சக்கணக்கான தண்ணீரை உறிஞ்சி வருகின்றன. தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்தது.
இந்த உத்தரவினை எதிர்த்து பெப்சி, கோக் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இது நெல்லை மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சிவசேனா மாவட்ட தலைவர் ரமேஷ் நெல்லை ரயில் நிலைய சந்திப்புக்கு எதிரே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி போராட்டம் நடத்தினார்.
அவரை மீட்க தீயணைப்பு படையினரும், போலீசாரும் முயற்சி செய்து வருகின்றனர். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கீழே இறக்க முயற்சி செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications