சசிக்கு எதிர்ப்பு- அதிமுக அலுவலகத்தில் 28 ஆண்டாக எம்ஜிஆர், ஜெ. படங்கள், விற்றவர் தொழிலுக்கே முழுக்கு
அதிமுக தொண்டர்களிடையே சசிகலாவுக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. 28 ஆண்டுகளாக அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை விற்றவர் சசிகலா படங்களை விற்க முடியாது என தொழிலுக்கே முழுக்கு போட்டிருக்கி
சென்னை: அதிமுகவை சசிகலா கைப்பற்றியதை ஏற்க முடியாமல் 28 ஆண்டுகளாக தலைமை அலுவலகம், பொதுக்குழு கூட்டங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை விற்பனை செய்த தம்பதி தொழிலையே கைவிடுவதாக அறிவித்திருப்பது அக்கட்சி தொண்டர்களின் உண்மை உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
அதிமுக தலைமை அலுவலகம், பொதுக்குழு நடைபெறும் இடங்களில் லலிதா, அன்பழகன் என்ற தம்பதியினரை நீங்கள் பார்த்திருக்க முடியும். 1988-ம் ஆண்டு முதல் இந்த தம்பதியினர் எம்ஜிஆர், ஜெ. படங்கள், அவர்களது படங்கள் பொறித்த கீ செயின்கள் உள்ளிட்டவற்றை கட்சி தொண்டர்களுக்கு விற்பனை செய்வதை முழுநேர தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்த தம்பதியினர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 1988-ம் ஆண்டு முதல் தலைவர், தலைவி (எம்ஜிஆர், ஜெயலலிதா) படங்களை விற்பனை செய்து வருகிறோம்.
இதைவைத்துதான் எங்களது வாழ்க்கையையே ஓட்டியும் வந்தோம். அதில் எங்களுக்கு நிம்மதி இருந்தது. ஆனால் இப்போது சின்னம்மா என்பவரது படங்களையெல்லாம் விற்க எங்களுக்கு மனம் வரவில்லை.
இத்தனை ஆண்டுகாலம் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது வைத்திருந்த பற்றால் செய்து வந்த இந்த தொழிலையே நாங்கள் விட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல.. எங்களைப் போன்ற தொண்டர்கள் ஒருநாளும் இந்த சின்னம்மா என்கிற சசிகலாவை ஏற்கவே மாட்டார்கள் என்றனர் குமுறலாக.