குற்றாலத்தில் துவங்கியது ஜில்லென்ற சாரல் திருவிழா.. குவியும் சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது.
நெல்லை: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகளுடன் சாரல் திருவிழா தொடங்கியது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்களும் சீசன் களைகட்டி காணப்படும். இதனால் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படும்.

அரசு சார்பில் திருவிழா
அதே போல் இந்த ஆண்டும் சீசன் ஆரம்பத்திலேயே நல்ல தொடக்கத்துடன் காணப்பட்டதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வண்ணம் ஆண்டுதோறும் அரசு சார்பில் சாரல் திருவிழா நடத்துவது வழக்கம்.

கொழு கொழு குழந்தைகள் போட்டி
8 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மலர் கண்காட்சி, பழ கண்காட்சி, நாய் கண்காட்சி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, கோலப் போட்டி, நீச்சல் போட்டி, படகு சவாரி போட்டிகள் நடத்தப்பட்டு மாலையில் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தமிழகம் முதல் இடம்
அதன்படி, இந்த ஆண்டிற்கான சாரல் விழா நேற்று தொடங்கியது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய வெல்லமண்டி நடராஜன், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகத்தில் முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். ரூ.24.65 கோடி வருவாய் கிடைத்திருப்பது சுற்றுலாத்துறையின் வரலாற்றில் சாதனை என்று பெருமிதத்துடன் கூறினார்.

பரதநாட்டியத்துடன் தொடக்கம்
திருவிழாவின் முதல் நாளான நேற்று பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நடத்தப்பட்டன. இன்று தோட்டக்கலை கண்காட்சியும், நாய்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளன. இதுபோல தினந்தோறும் படகுபோட்டி, நீச்சல்போட்டி, கோலப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இந்த திருவிழா களை கட்ட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் தற்போது அதிகரித்து வருகிறது. வருகிற 4-ம் தேதி வரை சாரல் திருவிழாவினை நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications