சென்னையில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்த 2 திருடர்களை விரட்டிப் பிடித்த எஸ்.ஐ.
சென்னை: சென்னையில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்தவர்களை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் துரத்திப் பிடித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள மேற்கு மாதா கோவில் தெருவில் வசித்து வருபவர் சரண்யா(22). எம்.எஸ்.கோவில் தெருவில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அவரின் வீடு உள்ள தெருவில் அவர் நடந்து செல்கையில் அவரை 2 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாததை உணர்ந்த அவர்கள் சரண்யாவின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதை பார்த்து சரண்யா உதவி கேட்டு கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக வந்த ராயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் அந்த 2 கொள்ளையர்களை துரத்திச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தார்.
விசாரணையில் அவர்கள் காசிமேட்டைச் சேர்ந்த பூபாலன்(23), சக்திவேல்(24) என்பது தெரிய வந்தது. ஜெயராம் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த சரண்யாவின் செல்போனை பறிமுதல் செய்தார்.
அந்த 2 பேரும் வேறு எங்காவது செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.