கோவையில் அலங்கார வளைவு மோதி இளைஞர் பலி... ஹைகோர்ட்டில் திமுக வழக்கு!
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவு மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை : கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவு மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ கார்த்திக் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ரகுபதி அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். திருமணத்திற்குப் பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ள அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் பழனி கோவிலுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றுள்ளார்.

பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தில் திடீரென்று மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக சென்ற கனரக வாகனம் தலைமீது ஏறி தலை நசுங்கிக் கோரமான முறையில் உயிரிழந்தார். இளைஞரின் இந்த உயிரிழப்பு அந்தப் பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் ரகுபதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர் வளைவு மோதி உயிரிழந்த ரகுபதி குடும்பத்தினருக்கு இழப்பீடு தர வேண்டும், பேனர் வைப்பதற்கு நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications