ஆரஞ்சு பழத்தின் தோலிலிருந்து கொசுவர்த்தி சுருள்.. சிங்கப்பூர் ஆய்வாளரின் ஆய்வு
தேவகோட்டை: ஆரஞ்சுப் பழத்தின் தோலிலிருந்து கொசுவர்த்தி சுருள் தயாரிக்கும் ஆய்வில் தான் ஈடுபட்டுள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஆய்வாளர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சிங்கப்பூர் ஆய்வாளர் சுவாமிநாதனுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவர்களிடம் ஆய்வாளர் சுவாமிநாதன் பேசுகையில், சூரிய ஆற்றலில் ஆராய்ச்சி செய்து பொருள் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். பள்ளியில் படிக்கும்போதே மின்விசிறி சுற்றுவது எவ்வாறு என ஆராய்ச்சி செய்து பார்த்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஆராய்ச்சிகளை சிறு வயது முதலே செய்து வந்துள்ளேன்.

உலகம் முழுவதும் பல ஆயிரம் டன் கழிவு பொருள்கள் மீண்டும் பயன்படுத்த முடியாமல் வீணாகிறது. இதில் பழங்கள் கழிவு அதிகமாகும்.பழங்களில் குறிப்பாக ஆரஞ்சு பழத்தின் தோள்களில் விட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. அதனுடன் வேறு கழிவு பொருள்களும் உள்ளன. முந்தைய காலங்களில் நம் வீடுகளில் பழத்தை சாப்பிட்டு விட்டு அதனை தோலை வெயிலில் காயவைத்து அதனை பொடியாக அரைத்து பல்வேறு வகையில் வீடுகளில் பயன்படுத்துவார்கள்.

வெயிலில் காய வைக்கும்போது தோலில் நச்சு பொருள்கள் அழிந்து நல்ல பொருள்கள் மட்டும் இருக்கும். அதனை அரைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்துவார்கள். வீணாக போகும் பல ஆயிரம் டன் பழ தோலில் இருந்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து அதன் மூலம் கெமிக்கல் இல்லாத கொசுவர்த்தி சுருள் உட்பட பல பொருள்கள் தயாரிப்பதற்கு ஆராய்ட்சிகள் நடைபெற்று வருகிறது.

அதாவது 100 சதவிகிதம் கழிவு பொருளில் இருந்து 100 சதவிகிதம் பயனுள்ள பொருளாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறோம். நாம் பிறந்த இந்த சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் நன்மை செய்ய வேண்டும் என்பது எனது இலக்கு ஆகும். தினசரி நமது வாழ்வில் 35 வகையான பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். யாரோ ஒருவர் தயாரித்த பொருள்களை நாம் பயன்படுத்தி சுகம் காண்பது போல் நாமும் எதையாவது கண்டுபிடித்து இந்த சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசையாகும் என்று பேசினார்.

அவரிடம் மாணவ, மாணவிகள் கார்த்திகா, ராஜி, ஜெனிபர், ஹரிஹரன், ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரி, தனலெட்சுமி, பரத் உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சன்மார்க்க சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் மாணவர் விஜய் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சன்மார்க்க சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும், பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்ற மாணவிகள் காயத்ரி, உமா மஹேஸ்வரி, தனலெட்சுமி ஆகியோருக்கும் அழைத்து சென்ற ஆசிரியை கலாவல்லிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவி சந்தியா நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications