தண்ணீரின்றி கருகிய சிறுகிழங்குகள்: விவசாயிகள் கண்ணீர்
நெல்லை: நெல்லை அருகே போதிய தண்ணீர் இல்லாததால் சிறுகிழங்குகள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
நெல்லை மாவட்ட பகுதியான கடையத்தில் ராம நதி, கடனா நதி ஆகிய இரண்டு அணைகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தென்மேற்கு பருவமழையை நம்பி முழுமையாக நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை இருப்பதால் ஆங்காங்கே சிறு கிழங்கு பயிரிடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த பகுதிகளில் பாசன வசதி பெறும் கடையம், ஆழ்வார்குறிச்சி, கோவிந்தபேரி, பிள்ளைகுளம், ராவணசமுத்திரம், வீரராகவபுரம், பெத்தன்பிள்ளை குடியிருப்பு, சிவசைலம், பாப்பான்குளம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சிறுகிழங்கு பயிர் செய்யப்பட்டது. தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் அணைகள் தண்ணீரின்றி வறண்டன. இதனால் அணையை நம்பி பயிரிடப்பட்ட சிறு கிழங்கு பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கின.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சிறு கிழங்கு பயிரின் ஆயுட்காலம் 6 மாதம் ஆகும். நான்கு மாத காலம் தண்ணீர் பாய்ச்சியும், காட்டு பன்றிகளிடம் இருந்தும் பயிர்களை காப்பாற்றி வந்தோம். தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால் சிறு கிழங்கு செடிகள் போதிய தண்ணீரின்றி கருகி வருகின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யக் கூடிய நிலையில் பயிர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. வயல்களில் உள்ள கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. இதனால் தண்ணீர் இன்றி எங்களை போன்ற விவசாயிகள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.