ஜெ.வின் சிறுதாவூர் பங்களா தீ விபத்து தொடங்கி பாலக்காடு சயான் ஆக்சிடெண்ட் வரை... சசி கும்பலின் சதி?
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா தீ விபத்து, கொடநாடு பங்களாவில் கொலை என்று சென்ற செய்திகள் இப்போது வேறு ஒரு கட்டத்தை அடைந்துள்ளன.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வெடுத்த இடங்கள்தான் சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் பங்களா. இதனால் சிறுதாவூரும் கொடநாடும் போலீசார் மற்றும் உளவுத்துறை கண்காணிப்பிலேயே இருக்கும். ஆனால் இந்த இரண்டு இடங்கள்தான் இப்போது தமிழக அரசியலையே கதிகலங்க வைக்கும் அளவுக்கு அடுத்தடுத்து திகில் திருப்பங்கள் நடந்து பீதியை ஏற்படுத்தி வருகின்றன.
சிறுதாவூர் ஜெயலலிதா பங்களாவில் சென்ற வாரம் தீவிபத்து நடந்தது. அந்த விபத்து பங்களாவில் இல்லை, வெளியில் உள்ள புல்தரையில்தான் தீ பற்றி எரிந்தது என்று தகவல்கள் வந்தன. ஆனால் டிடிவி தினகரன் டெல்லி போலீசால் வளைக்கப்படும் நேரத்தில் எப்படி சரியாக சிறுதாவூர் பங்களாவின் புல் தரையில் தீ பிடித்தது என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை.
இந்த நிலையில் ஆளே இல்லாத கொடநாடு பங்களாவில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது; காவலாளி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சசிகலாவும், இளவரசியும் சிறையில் இருக்கிறார்கள். தினகரன் டெல்லி போலீஸ் பிடியில் இருக்கிறார். ஜெயலலிதா உயிரோடும் இல்லை. இதைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளது என்றும் அவர்கள்தான் கொலை செய்தனர் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். இன்னொரு தேடப்படும் நபரான சாயான் கேரளாவில் விபத்தில் சிக்கியுள்ளார். இரண்டும் ஒரே நாளில் நடந்துள்ளது. இதுதான் மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
ஒரு திகில் திரைப்படம் போல தீவிபத்து, கொலை, சாட்சிகளை கலைக்க கொலை என்று நீள்கிறது மர்மங்கள். இந்தச் சம்பவங்களுக்கு பின்னே யார் ஒளிந்துள்ளார்? பின்னிருந்து இயக்கும் உண்மை குற்றவாளி யார்? என்பதுதான் அதிமுகவினரின் ஹாட் டாபி.