சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழகம் மீதான அக்கறையிலா? வைகோ விளக்கத்தை பாருங்கள்
கேரளாவின் சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டபாடி பகுதியில் அகழி மற்றும் சோலையூர் பஞ்சாயத்தில் ரூ.1000 கோடி மதிப்பில் 450 மீட்டர் நீளம், 51.5 மீட்டர் உயரத்தில் அணை கட்டி, ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. நீரை கேரளப் பகுதிக்குள் திருப்பிவிட திட்டமிட்டுள்ளது. இங்கு அணைகட்டுவது தொடர்பாக ஆய்வுசெய்ய, மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்ட மதிப்பீட்டு வல்லுநர் குழு அனுமதியும் அளித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக அணை கட்டும் பணியை கேரளா தொடங்கியது. இதனால் தமிழகத்தின் கொங்குமண்டலப் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போராட்டங்களும் நடத்தப்பட்டன. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார். மேலும், சிறுவாணி அணை பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த சூழ்நிலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட மத்திய அரசு தடைவிதித்தது. அட்டப்பாடியில் கேரளா அணை கட்டும் திட்டத்தை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அப்போது அவர், 'சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல. தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு தடை விதித்துள்ளது' என்றார்.
மேலும், 3 தொகுதி தேர்தல் குறித்து பேசிய வைகோ, 'இந்தத் தேர்தல்களில் மக்கள் நலக்கூட்டணி யாருக்கும்ஆதரவு அளிக்காது. புறக்கணிப்பு என்பதே தேர்தலில் பங்கெடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்' எனக் கூறினார்.