சிறுவாணியில் அணை கட்ட கேரளாவுக்கு கொடுத்த அனுமதியை திரும்பப் பெறக் கோரி மோடிக்கு ஜெ., கடிதம்
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு ஆதாரமாக பவானி ஆறு உள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா அருகே உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு, நீலகிரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்துக்குள் செல்கிறது. பின்னர் அங்குள்ள அட்டப்பாடி, அகழி ஆகிய பகுதி வழியாக சென்று முக்காலி என்ற இடத்தின் அருகே தமிழக எல்லைக்குள் வருகிறது.

கேரள மாநில எல்லையில் உள்ள சிறுவாணி அணையில் இருந்து கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையை கேரள பொதுப்பணித்துறை பராமரித்து வந்தாலும், அதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது.
சிறுவாணி அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் சிறுவாணி ஆற்றில் கலந்து 15 கி.மீ. தூரம் கேரள வனப்பகுதி வழியாக ஓடுகிறது. இந்த ஆற்றில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் சில கிளை நதிகளும் கலக்கிறது. இந்த சிறுவாணி ஆறு முக்காலி என்ற இடத்தின் அருகே பவானி ஆற்றில் சங்கமிக்கிறது.
சிறுவாணி ஆறு பவானி ஆற்றில் கலக்கும் முக்காலியில் அணை கட்ட கேரள அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை கேரள அரசு ஒத்திவைத்து இருந்தது. தற்போது மீண்டும் அந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதி அளித்ததை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடித விவரம்:
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரள அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதுபற்றி சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழக அரசின் கருத்தினைக் கேட்காமல் அளிக்கப்பட்ட இந்த பரிந்துரையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். சிறுவாணி ஆறு மாநிலங்களுக்கிடைய பாயும் காவிரி ஆற்றின் கிளை நதியாகும்.
எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மீறும் வகையில் ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கேரளம் தொடங்கக்கூடாது என தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என 21.6.2012 அன்று தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதன்பின்னர் தமிழக அரசு தொடர்ச்சியாக ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அட்டப்பாடி அணை திட்டம் தொடர்பாகவோ, அதுபற்றி வல்லுநர்கள் குழுவின் 96-வது கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றோ சுற்றுச்சூழல் துறை தமிழக அரசுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தவில்லை. இது வருத்தம் அளிக்கிறது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், அட்டப்பாடியில் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவதற்கு அளித்த பரிந்துரையை உடனே திரும்ப பெற மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீரை முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும். அதுவரையில், காவிரி படுகையில் கேரளா மற்றும் கர்நாடகாவின் எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தாங்கள் அறிவுறுத்தவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications