சிவகங்கையில் 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிக்கு 5 தூக்கு தண்டனை விதிப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குள்பட்ட 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விறகு வெட்டும் தொழிலாளிக்கு 5 தூக்கு தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கணம்புரியைச் சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். இவர் விறகு வெட்டும் தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள 10 வயதுக்குள்பட்ட சிறுமிகளை தனது வீட்டிற்கு தின்பண்டம் வாங்கித் தருவதாக அழைத்து வந்தாராம்.

வீட்டில் அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் மகளிர் போலீஸில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் திருப்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சந்திரனை கைது செய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை விதித்தார். அத்துடன் 4 ஆயுள் தண்டனை , 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். மேலும் தலா 7 லட்சம் ரூபாய் வீதம் ரூ 35 லட்சம் அபராதத்தை பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கையில் மற்றொரு சம்பவம்
சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், மூன்று சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கோவில் பூசாரி பெரியசாமிக்கு 178 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்கியதுடன், சமூகத்தில் ஒரு முக்கிய முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.
சிவகங்கையை அடுத்த சோழபுரத்தைச் சேர்ந்த 70 வயதான பெரியசாமி, 2024-இல் கோயிலுக்கு வந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை மிரட்டி, காயப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
குழந்தைகள் நலக்குழு புகார் அளித்ததையடுத்து, சிவகங்கை மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். நீதிபதி கோகுல்முருகன் வழக்கை விசாரித்தபோது, பெரியசாமிக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன.
தீர்ப்பில், இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததற்காக தலா 30 ஆண்டுகள் சிறை, ₹2,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு சிறுமிக்கு எதிரான வன்கொடுமைக்காக 20 ஆண்டுகள் சிறை, ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பூசாரி பதவியை துஷ்பிரயோகம் செய்து மூன்று பேரையும் குற்றத்துக்கு ஆளாக்கியதற்காக தலா 30 ஆண்டுகள் (மொத்தம் 90 ஆண்டுகள்), ₹3,000 அபராதம் என, இதர பிரிவுகளுடன் சேர்த்து மொத்தமாக 178 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இத்தண்டனைகளை அவர் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் தலா ₹5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications