”இடுப்பளவு தண்ணீரைக் கடந்தாத்தான் எங்களுக்கு படிப்பு”- தவிக்கும் திருப்புவனம் மாணவர்கள்
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மாணவர்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்றே கல்வி கற்றும் வரும் அவல நிலை இன்னும் தொடர்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது பழையனூர். அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், வாரச்சந்தை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, உர விற்பனை மையம் ஆகியவை இங்கு உள்ளன.
ஓடாத்தூர், சேந்தநதி, ஆலாத்தூர், சிறுவதூர் உள்ளிட்ட அருகாமை கிராமங்களில் இருந்து இங்கு வரும் மக்கள், கிருதுமால் நதியை கடந்துதான் வரவேண்டும். ஆனால், நதியைக் கடக்க இதுவரை பாலம் இல்லை. மழைக்காலங்களில் இந்த நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த சமயங்களில் பழையனூருக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.
அப்போது பக்கத்துக் கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமின்றி அன்றாடப் பணிகளுக்காக வரும் பொதுமக்களும் இடுப்பளவுத் தண்ணீரில் இறங்கித்தான் ஊருக்குள் செல்லவேண்டும். இந்த நதியை கடக்க பாலம் அமைக்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் பெய்த மழை காரணமாக கிருதுமால் நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பக்கத்து கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி வந்து செல்கின்றனர். பலர், கால் தவறி தண்ணீருக்குள் விழுந்து காயமடைகிறார்கள். இதுதவிர, விஷப்பூச்சிகள் கடிக்கும் அபாயமும் உள்ளது. மக்கள் நலன் கருதி, இங்கு விரைவில் பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.