சிவகாசியில் ரூ. 2 கோடி கேட்டு சிறுமி கடத்தல்- 2 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்
சிவகாசி: சிவகாசியில் ரூ. 2 கோடி கேட்டு தொழிலதிபரின் 5 வயது மகள் கடத்திய கும்பலை 2 மணி நேரத்தில் கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டனர்.
சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 50. யோகம் பிரின்டர்ஸ் உரிமையாளர். இவரது 5 வயது மகள் ரிஷிகா. எரிச்சநத்தம் செல்லும் வழியில் உள்ள தனியார் பள்ளியில் 1 ம் வகுப்பு படித்து வருகிறார்.

புதன்கிழமையன்று சிறுமி ரிஷிகா மாலை 4.30 மணிக்கு பள்ளி முடிந்து வீடு திரும்ப காத்திருந்தபோது காளிராஜ், வனமுத்துராஜா ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். 'தாங்கள் ரிஷிகாவின் சித்தப்பா மகன்கள்' என அறிமுகப்படுத்திக்கொண்டு ரிஷிகாவை அழைத்துச்சென்றனர்.
தினமும் ஆட்டோவில் செல்லும் ரிஷிகா இதை நம்பி காரில் ஏறிச்சென்றார். சிறுமியை கடத்தி சென்ற இருவரும், சிறுமியின் தந்தை சுரேஷ்குமாரிடம் செல்போனில் பேசினர். குழந்தையை கடத்தி விட்டதாகவும், ரூ. 2 கோடி தரவேண்டும் என்றும், பணம் தர மறுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர்.
சிறிது நேரத்தில் சிறுமியின் தந்தை சுரேஷ்குமாரை இருவரும் செல்போனில் அழைத்து 'வாட்ஸ் அப்' பார்க்க கூறியுள்ளனர். அதில் மயக்க நிலையில் ரிஷிகாவின் கழுத்தில் கத்தி வைத்தபடி படம்
இருந்தது. அதிர்ச்சியடைந்த சுரேஷ்குமார், ரூ.25 லட்சம் தருவதாக அவர்களிடம் கூறி, பின் அது குறித்து போலீசிற்கு தெரிவித்தார்.
சிவகாசி டி.எஸ்.பி., வெள்ளையன் சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தார். இருவரின் செல்போனில் இருப்பிடம் குறித்து தெரிந்து கொண்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் நத்தம்பட்டி செக்போஸ்டில் கடத்தல்காரர்கள் வந்த காரை மடக்கிய போலீசார், சிறுமியை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் இருவரும், சுரேஷ்குமாரின் சித்தப்பா, பெரியப்பா மகன்கள் ஆவர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சொந்த உறவினர்களே பணத்திற்காக சிறுமியை கடத்திய சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications