மடத்திலேயே பாலியல் தொல்லை.. அதுவும் 2 சிறுவர்களுக்கு! போக்சோவில் கள்ளக்குறிச்சி சிவனடியார் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோவில் மடத்தில் தங்கி சிவனடியாராக இருந்த இளைஞர் 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் அவரை போலீசார் போக்சோவில் அதிரடியாக கைது செய்து நிலையில் சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.

இந்த கோவிலில் சிவனடியாராக சிவபாலன் (வயது 31) என்பவர் தொண்டாற்றி வருகிறார். இவர் கோவில் மடத்திலேயே தங்கியிருந்தார். இவருடன் 2 சிறுவர்கள் தங்கியிருந்தனர்.
இவர்களுக்கு 18 வயது இன்னும் நிரம்பவில்லை. பள்ளி பயிலும் இவர்கள் சிவபாலனுடன் மடத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில் தான் சிவபாலன் இரவு நேரத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவம் குறித்து வெளியே கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் சிறுவர்கள் பயந்துபோய் சம்பவம் குறித்து வெளியே கூறாமல் இருந்துள்ளனர்.
இதனை சிவபாலன் சாதகமாக பயன்படுத்தி உள்ளார். இந்நிலையில் தான் மனம் வெறுத்த 2 சிறுவர்களும் சம்பவம் குறித்து பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் எழுதி போட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் செய்தது. மேலும் சிறுவர்கள் தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது சிவனடியார் சிவபாலன் சிறுவனிடம் அத்துமீறியது தெரியவந்தது. இதையடுத்து சிவபாலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த மடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications