மூன்றாவது நாளாய் இன்றும் சென்னையை நனைத்த பனி... விமான போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் காலை 7 மணியைத் தாண்டி கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால் 3 ஆவது நாளாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூரிலும் பனி மூட்டம் ஏற்பட்டதால் 4 விமானங்கள் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன. காலை 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்கவோ, கிளம்பிச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது.
சென்னையில் இருந்து புனே, அந்தமான், டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம், மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 20 க்கும் மேற்பட்ட விமானங்கள் காலை 8 மணிக்கு பிறகே வானிலை சீரானதும் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டு சென்றன.
நேற்று அதிகாலையில் துபாய், சிங்கப்பூர், அபுதாபி, மஸ்கட் ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த 4 விமானங்கள் பனி மூட்டம் காரணமாக தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமிட்டன.
பின்னர் 4 விமானங்களையும் பெங்களூருக்கு திருப்பிவிட விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் முடிவு செய்து திருப்பி அனுப்பினர்.